செவ்வாய், 20 நவம்பர், 2012


கடைசி நினைவு

அந்த நாள் வரும்
எனது உடல் வெள்ளைச்
சீலை மேல் கிடக்கும்
ஒரு மெத்தையின் நான்கு மூலைகளிலும்
அழகாக மடித்துச் சுற்றப்பட்ட துணிமேல்
வாழ்ந்து கொண்டிருப்பவர்களாலும்
இறந்து கொண்டிருப்பவர்களாலும்
முழுவதுமாய் நிரப்பப்பட்ட
ஒரு வைத்தியசாலையில்,

ஒரு குறிப்பிட்ட வேளையில்
வைத்தியர் முடிவெடுப்பார்,
எனது மூளை தனது வேலையை
நிறுத்திக் கொண்டதாக,
அதாவது
எல்லாக் குறிக்கோள்களுக்கும்
நோக்கங்களுக்குமான
எனது வாழ்க்கை நின்று  விட்டதாக,

அப்படி நடக்கும் பொழுது
எனது உடலின் மீது
 இயந்திரங்களின்  மூலமாக
ஒரு செயற்கை வாழ்வைத்
திணியாதீர்கள்,

இதை எனது மரணக் கட்டில்
என்று அழையாதீர்கள்,
இது எனது வாழ்வுக் கட்டில்
என அழைக்கப்படட்டும்,

எனது உடல் இங்கிருந்து
எடுத்துச் செல்லப்பட்டு
ஏனையோர் முழுமையாக
வாழ்வதற்கு உதவி செய்யட்டும்,

எனது பார்வையை
ஒரு மனிதனுக்குக் கொடுங்கள்,
ஒரு சூரிய உதயத்தை
ஒரு குழந்தையின் அழகு முகத்தை
ஒரு பெண்ணின் கண்களின் காதலினை
காணாத ஒருவனுக்கு,

எனது இதயத்தை ஒருவனுக்கு...
தனது  இதயத்தில்
முடிவில்லா வேதனையைத் தவிர
வேறெதனையும்  சுமக்காதவனுக்கு,

எனது இரத்தத்தை ஒரு இளைஞனுக்கு...
அவனது நொறுக்கப்பட்ட காரிலிருந்து
இழுத்து எடுக்கப்பட்டவனுக்கு,
அவன் சில வேளை அவனது
பேரக் குழந்தைகள் விளையாடுவதனைப்
பார்த்து ரசிக்க முடியும்,

எனது சிறு நீரகங்களை இன்னுமொருவனுக்கு..
வாரா வாரமாய் வாழ்வுக்காய்
இயந்திரத்தில் தங்கியிருப்பவனுக்கு,

எனது எலும்புகளை
எடுத்துக் கொள்ளுங்கள்...
சகலவித தசை, நார்,
உடலின் நரம்புகள்
எல்லாவற்றினாலும் ஊனமுற்ற
ஒரு குழந்தை எழுந்து நடக்கட்டும்,

எனது மூளையின்
சகல மூலைகளிலும் தேடுங்கள்//
எனது கலங்கள் தேவையானாலும்
எடுத்துக் கொள்ளுங்கள்- அவை வளரட்டும்,
சில வேளை ஒரு செவிடான சிறுமி
அவளின் யன்னலினூடாக
மழையின் ராகத்தை ரசிக்கட்டும்,

மிகுதியை எரியுங்கள்,
காற்றில் சாம்பாலை தூவுங்கள் ..
பூக்கள் மலர்வதற்காய்,


நீங்கள் புதைப்பதானால்
எனது பிழைகளையும்
எனது பலவீனங்களையும் - நான்
ஏனையோருக்கு இழைத்த அநீதிகளையும்
மட்டும் புதையுங்கள்,

எனது பாவங்களை
சாத்தானுக்குக் கொடுங்கள்,
எனது ஆத்மாவினைக் கடவுளுக்குக்
காணிக்கை யாக்குங்கள்..


தற்செயலாக என்னை நீங்கள்
நினைவு கூர நாடினால்,
உங்களை நாடுபவர்களிடம் - அதனை
அன்பும் பரிவும்  மிக்க சொற்களாலும்
செயல்களாலும் கொடுத்து விடுங்கள்

நான் கேட்டவற்றை யெல்லாம்
நீங்கள் வழங்குவீர்களானால்
எனக்கு மரணம் கிடையாது !!!


தமிழில்:   நஜிமுதீன்




உறக்கம் 


எப்படிப் பழக்கப்பட்டது இது,தலையில் மழை சுட,காலில்  நிலம் குளிர,தளிர்களின் செந்நிறமும்சலசலப்பும்அவர்தம்  நிலம் விட்டேகும் நிம்மதியோடு,நீட்டி நிமிர்ந்து உறங்கப் பழகி எப்படி சாத்தியமானது இது!

வியாழன், 22 மார்ச், 2012

எங்கே செல்லும் இந்தப் பாதை....

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி

இலங்கையின் புரையோடிப் போன இனப் பிரச்சினைக்கு முள்ளி வாய்க்கால் முற்றுப் புள்ளி வைத்து விட்டதாக இறுமாந்திருந்த பேரினவாதிகளுக்கு பேரிடியாக விழுந்திருக்கிறது உலக வல்லரசுகளின் தீர்க்கமான நடவடிக்கைகள். என்னதான் மார் தட்டிக் கொண்டாலும் யுத்தம் வெல்லப்பட்ட தென்னவோ காட்டிக் கொடுப்பால்தான் என்பதனை சிறு குழந்தைகூட அறியும். அந்த நிலைமையில் தங்களது ஒட்டுமொத்த கோபத்தையும் காட்டி ஒரேயடியாகச் சாய்த்து விட்டால் எல்லாம் ஓய்ந்து விடும் என்று எண்ணிய நிலையில் ஆரம்பித்த இடத்துக்கே திரும்பி வந்திருக்கிறது இனப்பிரச்சினை. மீண்டும் பேச்சு வார்த்தைகள் தீர்வுத்திட்டங்கள், புறக்கணிப்புக்கள், போராட்டங்கள் என்று புது வடிவம் காணப் போவது போல் தோன்றுகிறது.
இதற்கிடையில் எவ்வளவோ போராட்டங்களையும்,ஆர்ப்பாட்டங்களையும் அணிவகுப்புக்களையும் நடாத்தி முடித்திருக்கின்றார்கள் நம்மவர்கள். எல்லாமே விழலுக்கிறைத்த நீராக வீணாகிப் போயின. போதாத குறைக்கு உடனிருந்த இந்தியா கூட மாறி வாக்களித்திருக்கிறது- அதுவும் ஒரேயொரு ஆசிய நாடாக.
பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி விடுதல் என்பர், பிரச்சினையை ஆரம்பித்தவர்களும் அவர்களே, முடித்து வைத்தவர்களும் அவர்களே என்று எத்தனையோ பேர் கூறி விட்டார்கள். ஆனால் இவ்வளவு நடந்தும் யாரும் எந்தப் பாடமும் படிக்கவில்லை என்பதுதான் மிகவும் கவலையான விடயம்.
1970 தொடக்கம் 1977 வரையான காலகட்டத்தில் சீனாவுடன் நெருங்கிய எமது சொந்தங்களைத் தட்டிக் கேட்பதற்கு என்றுதானே எமது நாட்டுக்குள் இவ்வளவு பிரச்சினைகளையும் உருவாக்கினார்கள். இன்றும் நாம் அதே வழியில்தான் செல்கின்றோம், அவர்கள் சும்மா இருப்பார்களா என்று தெரியவில்லை.
தேசப்பற்று என்று தொண்டைகிழியக் கத்துபவர்களுக்கு, அதிலும் அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு யதார்த்தமும் புரியவில்லை, ராஜதந்திரமும் தெரியவில்லை. இனவாதத் தீயைக் கக்கிக்கொண்டே இருக்கின்றார்கள். அவர்களை அடக்கி வைப்பதற்கான ஆளுமை இல்லாமலிருக்கிறதா அல்லது அதற்கான தேவை இல்லையெனக் கருதுகிறார்களோ  தெரியவில்லை.
எது எப்படியிருப்பினும் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் இதுவெனக் கருதலாம். எல்லாவற்றையும் இழந்து எதிர்காலம் குறித்த எந்தவித நம்பிக்கையும் இல்லாதிருந்த தமிழ் சமூகத்துக்கு எங்கோ ஒரு மூலையில் சிறியதொரு நம்பிக்கைக் கீற்று தென்படுவதாகக் கொள்ளமுடியும் போல் தோன்றுகிறது,
இதற்கிடையில் நாட்டைவிட்டுத் தப்பியோடி அந்நிய நாடுகளில் தஞ்சம் புகுந்தோர், ஒன்று அல்லது இரண்டு தலைமுறையினர் தாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டது போல் உணர்ந்தாலும் அடுத்த தலைமுறை அதனை உணரப் போவதுமில்லை, மீண்டும்  வரப் போவதுமில்லை. அவர்களது வாழ்வு வளம் பெற்று விட்டது போலவே தெரிகிறது.
வான்கூவர் நகரத்திலே அவர்களின் நடமாட்டத்தை நன்றாகவே உணர முடிகிறது.

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

காலத்துயர்



தனிமையில் அழுது கழிகின்ற
பொழுதுகளினூடு
முறையிடும் என்னிரவுகள்,
சில விடயங்களின்
நிகழ்வுகளை
காலத்தின் முட்களைப்
பின்னகர்த்தி
முழுவதுமாய் அழித்துவிட
விண்ணப்பிக்கின்றன,
சாறு பிழியப்பட்ட
கழிவெனக் கருகிய
மனதில்
இன்னும் இன்னும்
ரணமாகிக் குருதி
கொட்டும்,
கந்தலாய்க்
கிழித்து வீசப்பட்ட
உடல் மட்டும்
உஷ்ணத்தைத் தணிக்கும்
துணித் துண்டாய்
தேவையின் நிமித்தங்களில்
தலை நிமிர்ந்து கொள்ளும்.

சாந்த(மா)மருது


வயலும் வயல் சார்ந்த மருதம்
வருடும் உடல் சோர்ந்த நேரம்
கயலும் கை கோர்த்த தொப்ப - பல
அயலும் அதைப் பார்க்க மருளும்

தென்றல் தரும் அந்த மருதம்
திங்கள் எழும்  அந்தத் திசையில்
நெஞ்சம் இதம் கொண்ட மனிதர் - அதில்
நிறைக்க வரும் மந்த மாருதம்

கிழக்கு நிலம் எங்கும் நோக்கின்
கடலும் கடல் சார்ந்த நெய்தல்
உடலின்  உணர்வோடு ஒன்றி - அதில்
உறங்கத் தாலாட்டு இசைக்கும்

காடும் காடயல் முல்லை
கானகத்திடை   எழு  மருதம்
நாடோடு சேர்ந்ததோர்  தருவாய் - இதில்
நாட்படச் சாய்ந்திடல் நம்புதற்கில்லை.

மருதமும் நெய்தலும் கொஞ்சி
முல்லையின் மனமதைத் தாங்கி 
மலையிடைக் குறிஞ்சியின் - இள
மார்பிடை தவழும் தென்றலின் ஊடாய்

மனிதரில் விதைத்திட்ட சாந்தம்
மறைந்திடா சிதைந்தாலும் சிறிது
எளிதினில் மறக்காத வண்ணம் - இதை
எத்தியே வைத்திடல் ஏற்றம் என்றுரைப்பேன்

சாந்தமும் மருதமும்  சேர்ந்திடும் பூமி
நெய்தலும்  முல்லையும் சாமரம் வீசி
குறிஞ்சியின் சாரலால் குளிர்ந்தவள் - நான்கு
நிலங்களால் சூழ்ந்த சாந்தமா மருது!!!
Bottom of Form

எதிர்பார்ப்புக்கள்




தனியாக நடப்பட்ட
இந்த மரத்திற்கு
ஆதியும் இல்லை
நாதியும் இல்லை,

தானாகவே நிலம் பிளந்து
தன்னை நிறுத்திக் கொண்டது,
காலால் ஊற்றெடுத்து
தலையால் உணவெடுத்து
தளைத்த பொழுதுகளில்

இளமையின் உல்லாசத்தில்
பூத்துக் குலுங்கிய பொழுதுகளில்

உல்லாசத்தின் உச்சத்தில்
கருவாகிக் 
காயாகிய பொழுதுகளில்

 எனது உடல்
சடைத்து
நிழல் தந்த பொழுதுகளில்

எல்லாம் இருந்தன
எல்லோரும் இருந்தனர்,

இன்னும் மாய்கின்றேன்,
அவை  எப்படி
இப்படி 
மறைந்து போயின....



இரண்டாவது இயல்புகள்


நரை, திரை, மூப்புடன்
போட்டியிட்டபடி
இரண்டாம் இயல்புகளும்
வளர்கின்றன,
அறியாமல் வளரும்
அவற்றின் பசியைத்
தீர்க்க முடியாமல்
நாளும் சவரக் கத்தியினால்
சீவிக் கத்தரிக்கிறேன்,
இருந்தும் வேர்
உள்ளிருந்து
வெறுப்பேற்றிக்
 
கொண்டிருக்கிறது.

ஸ்பரிசம்


மேகம் சூழ்ந்த இரவின்
மெல்லிய தென்றல்
யன்னல் திறந்து
கன்னத்தில் முத்தமிடும்,
தாயின் அதரங்கள்
வருடும் கணங்களில்
வான் இறங்கி
சொர்க்கத்தின் வழிகாட்டும்,
செல்லக் குழந்தையின்
சின்னக் கன்னங்கள்
சிவந்து குவிந்து
குதூகலிக்கும்,
எங்கே கிடைக்கும்
இந்த சிலிர்ப்பும்
மெய் மறப்பும்,
தாய்க்கேது
மாற்றீடு.